முல்லைத்தீவில் ஐஸ் போதைக்கு அடிமையான 16வயது மாணவன் உயிரிழப்பு..!

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 வயதுடைய மாணவன், தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப் பகுதியில் இன்று (03.11.2023) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில், மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரிய வந்துள்ளது.



மேலும், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடசாலை செல்லவில்லை என்றும் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வடக்கில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகல் அதிகரித்துள்ளதாக அண்மையில் வடமாகாண ஆளுநர் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.



பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகள் சரியான முறையில் அக்கறை காட்ட தவறியுள்ளமையும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.

பாடசாலையுடன் தொடர்புடைய மாணவர்கள் குறிப்பிட்ட காலம் பாடசாலை செல்லவில்லை, போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர் என்றால் அவர்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட பெற்றோர்கள், பாடசாலைச் சமூகம், சமூக மட்ட பொது அமைப்புக்கள் என்பன சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.



இவ்வாறு பல சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இவற்றைக் கட்டுப்படுத்த இவ்வாறு இடை விலகும் மாணவர்கள் உள்ள குடும்பங்களுக்கான சமுர்த்தி, வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அரச சலுகைகளை கிராம மட்ட அமைப்புக்கள், பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் உள்ளிட்டவைகள் இணைந்து நிறுத்துவதன் ஊடாக மட்டுமே இவற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.