வவுனியாவில் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு..!

வவுனியா, தரணிக்குளம் பகுதியிலிருந்து இன்று (14.11) காலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

தரணிக்குளம் குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், பல மணிநேரத்தின் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் அதனை மீட்டனர்.

குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையிலும் முகம் உருக்குலைந்த நிலையிலும் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.



இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் காணப்படுகின்றது.



இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய நாட்களில் பெண் பிள்ளைகள் யாரும் காணாமல் போயிருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கோ ( 0774270338) தகவல் வழங்குவதனூடாக குறித்த பெண்ணை இனங்காணக் கூடியதாக இருப்பதுடன் குற்றவாளிகளையும் உடன் கைது செய்ய உதவியாக இருக்கும்.