ஜனாதிபதித் தேர்தலை வைக்காவிடின் ரணிலை வீட்டுக்கு அனுப்ப தயாராக உள்ளோம் – அநுர எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலை அடுத்தாண்டு செப்டம்பர் 17ஆம் திகதிக்கு பின்னரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலொன்றை வைக்காவிடின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப தயாராக உள்ளோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.



“அவருக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று அரசியலமைப்பின் படி ஜனாதிபதித் தேர்தலை அடுத்தாண்டு செப்டம்பர் 17ஆம் திகதிக்கு பின்னரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னரும் நடத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலை நடத்த மாட்டோம் என கூறினால் அவரை வீட்டுக்கு அனுப்ப தயாராக உள்ளோம்.



தன்னை மிகவும் சக்தி வாய்ந்த ஜனாதிபதி என்று கூறிய கோட்டாபய ராஜபக்ஷவை இந்த நாட்டு மக்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது அதிகாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை. அதனால் வேறு வழியின்றி ரணில் ஜனாதிபதியானார்.



அதிகாரத்தை வேறு எவருக்கும் பெற்றுக் கொடுக்க நாம் தயார் இல்லை. மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்துடனே ரணிலை வீட்டுக்கு அனுப்புவோம். – என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்