வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு தொடரும் – சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் தெரிவிப்பு

வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவினை காஷ்மீர் மக்கள் வழங்குவார்கள் என்று காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள வடக்கு,கிழக்கு அரசியல் , சிவில் ,புலம்பெயர் தரப்பினருக்கும் காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் நடைபெற்றிருந்தது.



இந்தச் சந்திப்பின் போது, வடக்கு கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அத்தோடு, ஆழமாக ஆராய்ந்து பார்க்கின்றபோது காஷ்மீர் மக்களும், வடக்கு,கிழக்கு மக்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளும் ஒரே வகையானவையாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.



இதேநேரம், இந்தக் கலந்துரையாடலின்போது தமிழர்களையும் அவர்களின் தாயகத்தையும் பாதுகாக்க இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நீதிக்கான ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாக வடக்கு,கிழக்கு அரசியல், சிவில்,புலம்பெயர் தரப்பினர் எடுத்துரைத்தனர்.

அத்துடன், தமிழர் தாயகத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இணைப்பு திட்டங்களை ஊக்குவித்தல், சுயநிர்ணய உரிமை மற்றும் சிவபூமியைப் பாதுகாத்தல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.



இவற்றுக்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு காஷ்மீரர்கள் தயாராகவுள்ளதாகவும், தொடர்ச்சியான இருதரப்பு கலந்துரையடல்களை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.