அதிபர் நியமனத்தில் பாரிய முறைகேடு; மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

வடமாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை பெற்றுத் தருமாறு கோரி இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் எற்பாட்டில், கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால், இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தலைமையில், வடமாகாண யாழ்ப்பாண மாவட்ட அதிபர் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட அதிபர்கள் இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.



இதேவேளை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களாகிய தமக்கு புள்ளியிடல் முறைமையின் கீழ் அதிகஷ்ட பிரதேசங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாம் ஆசிரியர்களாக பல ஆண்டுகள் அதிகஷ்ட பிரதேசங்களில் சேவையாற்றி வந்துள்ளோம். தற்போது போட்டி பரீட்சையில் தோற்றி, அதிபர்களாக நியமனம் பெற்றுள்ளோம்.



அவ்வாறு நியமனம் பெற்ற எம்மை மீள அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு அதிபராக நியமித்துள்ளமையால், எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிகஷ்ட பிரதேசத்தில் ஆசிரியர்களாக சேவையாற்றிய எம்மை மீள அதிகஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்க வேண்டாம் என கோரியுள்ளனர்.



மாவட்ட ரீதியில் வெற்றிடங்கள் உள்ள நிலையில் வெளி மாவட்டங்களுக்கு கட்டாய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை வடக்கின் கல்வியை அழிக்க பாரிய சதிகள் ஏதும் மேற்கொள்ளப் படுகின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.