மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த 26 வயதுடைய பெண் கைது..!

பேஸ்புக், வட்ஸ்அப் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்புடைய இளம் பெண்ணொருவர், பொதி செய்யும் சாதனங்களுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே கடந்த 2023 டிசம்பர் 28 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.



கைதன இளம் பெண்ணின் கணவரும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதுடன், இப்பெண் மற்றுமொரு ஆணுடன் உறவினை தொடர்ந்து போதைப்பொருள் வலையமைப்பினை நடத்தி வருகின்றார்.



இப்பெண்ணின் போதைப்பொருள் வலைப்பின்னலானது பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்டு சமூக வலைத் தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் ஊடாக இடங்களை குறிப்பிட்டு ஐஸ் மற்றும் இதர போதைப் பொருட்களை விநியோகித்து வந்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் செயற்பட்டு வரும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.



அத்துடன் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.