போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரை ரிஐடிக்கு வருமாறு அழைப்பு..!

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவர் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (ரிஐடி) அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று நேற்று (10) வழங்கப்பட்டுள்ளது.



வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்பவரை 12 ஆம் திகதி காலை 09 மணிக்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.



குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விசாரணை பிரிவு ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக முகநூல் கணக்கு சம்மந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக 2024 .03.12 அன்று காலை 9.00 மணிக்கு இல149, கெப்பிட்டல் கட்டிடம், நாரஹன்பிட்டியவில் உள்ள விசாரணை பிரிவு ஒன்றின் நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைக்கின்றோம்“ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.