Sunday, August 23, 2026
Huisதாயகம்முல்லைத்தீவில் மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் - ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவில் மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு நகரில் மணிக்கூட்டுக் கோபுரமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் போது, அங்கு நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகையொன்றை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

குறிப்பாக கடந்த 07.07.2026ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சுசார் ஆலேசனைக் குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகிலுள்ள வீதிச் சுற்று வளைவில் மணிக்கூட்டுக் கோபுரமொன்று அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை நான் முன்வைத்திருந்தேன்.

இந்நிலையில் மணிக்கூட்டுக் கோபுரம் என்பது ஒரு பழைய நடைமுறை எனத் தெரிவித்த அமைச்சர் விமல் ரத்நாயக்க, நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை ஒன்றினை பொருத்துவோமா எனக் கேட்டிருந்தார். நான் அதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தேன்.

அதனைத்தொடர்ந்து மணிக் கூட்டுக் கோபுரமொன்றை அமைப்பதற்கு பதிலாக, புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை ஒன்றினை பார்வைக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் தலைமை அதிபதிக்கு அமைச்சர் விமல் ரத்நாயக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை ஒன்றினை பார்வைக்கு வைப்பது என்ற கடந்த கூட்டத்தீர்மானத்தின் முன்னேற்றநிலை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அந்தவகையில் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை ஒன்றினை பார்வைக்கு வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான கேள்விகோரல் உள்ளிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் போது, அங்கு நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை பொருத்தப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் தெரிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்காக அமைச்சருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்தேன் – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!