தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி வழங்கியபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன், அது தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் “மக்கள் பேரவைக்கான இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சட்டத்தரணி நுவன் போபகே இது குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக, மாற்று சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தி, அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்குமுறை செய்யும் வரலாற்றில், இவ்வாறான சட்டங்களை கொண்டுவருவது அந்த ஒடுக்குமுறையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் செயலாக இருக்கிறது.
மேலும், ஜனநாயகம் குறித்த தெளிவான நிலைப்பாட்டில் இல்லாது, பொருளாதாரம் தொடர்பாக கடந்த காலங்களில் அரசாங்கம் தெளிவான புரிந்துணர்வு இல்லாமையால் நாட்டு மக்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஜனாதிபதியின் இந்தியா மற்றும் சீனா விஜயத்தின் போது எட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் அடிப்படையில், அந்த நாடுகளின் அதிகார நோக்கங்களுக்காக மக்களின் வளங்களை விற்கும் முறையும் அதே முறையில் செயற்படுத்தப்படுகிறது.
அதன்படி, திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்றும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் விவரங்கள் பொது மக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ முன்வைக்கப்படவில்லை என்பதுடன், மேலும் இந்த விடயத்தில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் அரசாங்கம் பல்வேறு பிரச்சார திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. எனத் தெரிவித்தார்.
Recent Comments