எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்துப் போட்டியிட தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகப் போட்டியிடப் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. யாழில் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், தமக்கிடையில் இரண்டு சுற்றுப் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் பின்னர், 9 கட்சிகள் இணைந்து தேர்தலில் கூட்டாகப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தன.
இந்நிலையில், ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் தலைமையில் இயங்கும் கட்சியையும் இந்தப் புதிய கூட்டில் உள்ளடக்கியமையால் சில கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
இதையடுத்து, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என்பன இந்தப் புதிய கூட்டில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, கடந்த காலத்தில் அரசுடன் இணைந்து தமிழர் விரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுடன் எதுவித கூட்டும் இல்லை என்ற கொள்கைக்கு இணங்க தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.


Recent Comments