2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மருத்துவமனைகள் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது என்பது உண்மை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான அல்ஜசீராவுக்கு ரணில் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைச் சுட்டிக் காட்டினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறுதிப் போரில் சிக்குண்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன.
மருத்துவமனைகள் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது என்பது உண்மை. எனினும், இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை.” என விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அத்துடன் ”2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு விட்டதா?“ என ஊடகவியலாளர் மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ”எந்தச் சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர் விமானப் படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன.
இதற்காகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்தத் தாக்குதல் பெருமளவில் இடம் பெற்றது என்று நான் சொல்ல மாட்டேன்.” – என்று குறிப்பிட்டார்.
மேலும், “ஐக்கிய நாடுகளின் குழு, இலங்கைப் படையினர் போரில் சிக்குண்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளனரே?” – என்று மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ”நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன்.” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments