16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி பிரதேசத்துப் பாடசாலை விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் சனிக் கிழமை (12) தொடர்பு கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது.
16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம். ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு மாகாண கல்வி அமைச்சானது இத்தகைய பாலியல் மற்றும் இரத்மலானை மது விருந்து உள்ளிட்ட மோசமான ஒழுக்கச் சீர்கேடுகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அதேவேளை கட்டுப்பாடு, ஒழுக்கங்களைப் போதிப்பவர்களுக்கு எதிராகவே பழிவாங்கல் செயற்படுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Recent Comments