Sunday, October 12, 2025
Huisதாயகம்யாழில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்..!

யாழில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்..!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 17 வயதான சிறுமியொருவர் கடந்த 4 நாட்களின் முன்னர், வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் சிறுமியின் தந்தை இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அவர் தமது வீட்டில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்தும் காணாமல் போய்விட்டதாக கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் சித்தப்பா குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

தமது மகள் காணாமல் போன விவகாரத்தில் தனது தம்பிக்கும் தொடர்பிருப்பதாக, சிறுமியின் தந்தையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சித்தப்பாவையும் பொலிசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

இதற்கிடையில், சிறுமி கிளிநொச்சி- கனகபுரத்தில் உள்ள தமது வீட்டில் தங்கியிருந்ததாகவும், அதிகாலை 3.30 மணியளவில் திடீரென காணாமல் போய்விட்டதாகவும், சிறுமியின் சித்தி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

நேற்று சிறுமி தமது வீட்டுக்கு திரும்பி வந்ததாக குறிப்பிட்டு, சித்தப்பா குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.

சிறுமி காணாமல் போன முறைப்பாடு இளவாலை பொலிஸ் நிலையத்தில் உள்ளதால், கிளிநொச்சி பொலிசார் சிறுமியை அங்கு அனுப்பி வைத்தனர்.

இளவாலை பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை காதலன் வல்லுறவுக்குள்ளாக்கியதுடன், தனது நண்பனுக்கும் இரையாக்கியதும், சிறுமியின் சித்தப்பா சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கியதும் தெரிய வந்தது.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, சிறுமி கிளிநொச்சி, கனகபுரத்திலுள்ள சித்தப்பா குடும்பத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார். சித்தப்பாவுக்கும், சிறுமிக்கும் முறையற்ற தொடர்பு உள்ளதாக சிறுமியின் குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்தது.

சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த சிறுமி, தான் முன்னர் காதலித்த இளைஞனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் காதலனின் அறிவித்தல்படி அதிகாலை 3.30 மணியளவில் சிறுமி, சித்தப்பா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். தனது நண்பனுடன் முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் காதலன், சிறுமியை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

பூநகரி பகுதியில் வீடொன்றில் சிறுமியை தங்க வைத்து, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார். பின்னர், முச்சக்கர வண்டியில் வந்த நண்பனும், சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்.

இருவரும் சிறுமியை பல முறை வல்லுறவுக்குள்ளாக்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் சிறுமியை அழைத்துச் சென்று, யாழ்ப்பாணம்- கைதடியில் இறக்கியுள்ளனர். ரூ.1000 பணத்தை சிறுமியிடம் வழங்கி, பேருந்தில் வீடு செல்ல கூறியுள்ளனர்.

அடுத்து எங்கு செல்வதென தெரியாத சிறுமி, பேருந்தில் கிளிநொச்சியிலுள்ள சித்தப்பா வீட்டுக்கே சென்றுள்ளார். அங்கு சித்தப்பாவும் தன்னை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் கிளிநொச்சி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவில் நடந்ததால், சிறுமி தற்போது கிளிநொச்சி பொலிசாரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!