மன்னார் – நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 27.05.2025 நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளைக் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கீராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு இவ்விடயம் அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப் பட்டதையடுத்து, அவர் இவ்வாறு நிலமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
ஏற்கனவே கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப் போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்க முடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்க முடியமென மக்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டு சென்று, தடுப்பணை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.


Recent Comments