ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் மிச் நகர பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை வாச்சுக்குட்டி நெவ்பர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 21ஆம் திகதி 2,400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது செப்டம்பர் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இன்று (26) வழக்கு விசாரணைக்காக சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, திறந்த நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.
திறந்த நீதிமன்ற நடவடிக்கை பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், குறித்த நபர் காலை 11.50 மணியளவில் சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று ஜன்னல் கம்பியில் தனது சாரத்தை கழற்றி கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு, நீதவான் அனுமதியுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
உயிரிழந்த நபருக்கு எதிராக இரண்டு திருட்டு மற்றும் நான்கு போதைப்பொருள் வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments