மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரி பாடசாலை 02.10.2025 மாணவர்கள் பாடசாலை முன் நுழைவாயிலைப் பூட்டி ஆசிரியர்கள் எவரையும் உட்செல்ல விடாது தடைசெய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேவேளை, அதிபருக்கு ஆதரவாக இருக்கும் சிலரால் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரும் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த பாடங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் இல்லாது இருந்து வருகிறதுடன் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இது தொடர்பாக அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிமனையின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை ஒரு தீர்வும் இல்லை என்றும் மாணவர் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வலய கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே, எங்களுக்கு உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்து குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை வலயக்கல்வி பணிப்பாளர் நியமித்து தரும் வரைக்கும் பாடசாலை கதவை திறக்க முடியாது என மாணவர்கள் சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 7.00 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த போராட்ட இடத்திற்கு தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்திருக்கின்றார். இதன்போது அங்கு சிற்றுண்டிச்சாலை நடத்தி வருவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு சமைத்து உணவு வழங்கி வரும் பெண் ஒருவரின் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதிபரின் பணக் கையாளுகை பற்றி அப்பெண்ணால் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதிபர் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அங்கிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை இன்று தொடக்கம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தற்காலிகமாக அங்கு இணைப்பதாகவும் உத்தரவாதம் அளித்ததையடுத்து பகல் 12.மணிக்கு மாணவர்கள் நுழைவாயில் கதவை திறந்து உட்செல்ல அனுமதித்தனர்.
Recent Comments