திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் நிலவரம் தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைக்காக இன்றைய தினம் (18.11.2025) காவல்துறை குற்றவியல் மற்றும் தடயவியல் விசாரணைப் பிரிவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பகுதியில் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றதுடன் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுமானம் தொடர்பிலும் அளவுகளையும் அளந்தெடுத்துக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.
திருகோணமலை துறைமுக கடற்கரை வளாகத்திலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் நேற்று (17.11.2025) காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த புத்தர் சிலையுடன் கூடிய கூடாரம் கடலோர பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்தது.
கடந்த 16 ஆம் திகதி, திருகோணமலையில் உள்ள கடலோர பாதுகாப்பு வலயத்திற்குள் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையின் பிக்குகள் மற்றும் நன்கொடையாளர்கள் குழு மூலம் அங்கீகரிக்கப்படாத குடிசையொன்று கட்டப்பட்டு வருவதாகவும், அங்கு புத்தர் சிலை வைக்கப்படுவதாகவும் திருகோணமலை துறைமுக காவல்துறையிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments