வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்கன் குளம் கிராமத்தில் கிரவல் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொது மக்களை பொலிசார் கைது செய்தமை தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகம் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிரதி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்கன் குளம் கிராமத்தில் அங்குவாழும் மக்களின் எதிர்ப்பையும் மீறி கிரவல் அகழ்வு நடைபெற்றது.

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் அவர்களுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது, அவரும் இச் செயற்பாட்டை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு அகழ்வை நிறுத்துமாறு கோரப்பட்டது.
ஆனால் பிரதேச செயலாளர் தன்னிச்சையாக அனுமதிக்கான ஒப்புதலை கனியவள திணைக்களத்திற்கு வழங்கியதால் அவர்கள் அகழ்விற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.
பிரதேசசபை தமது வீதியை கிரவல் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று கூறி இன்று (15) கிராம மக்கள் 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் எனக்கு அறிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலாளருடன் பேசிய போது அவரும் மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தினார்.
உடனடியாக எதிர்ப்புப் போராட்டம் நடத்த கிராமவாசிகள் அணி திரள்கிறார்கள். இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே தாங்கள் இவ்விடயத்தில் தலையீடு செய்து பிரச்சினையை தீர்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






Recent Comments