முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2026 நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
கூழாமுறிப்பு கிராம மக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பானது, கூழாமுறிப்பு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

அந்தவகையில் உள்ளகவீதிகளின் சீரமைப்பு, பழுதடைந்த வீதி விளக்குகளை சீர்செய்தல், கூழாமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் சீரின்மையால் குளத்துநீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முத்துஐயன் கட்டு ஏழாம் கண்டம் கமக்கார அமைப்பினைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முத்து ஐயன்கட்டு ஏழாம் கண்டத்திற்குரிய நீர்ப்பாசன வாய்க்காலை அமைத்தல், விவசாய வீதிகளை சீரமைத்தல், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன் போது முன்வைக்கப்பட்டன.
குறித்த குறைகேள் சந்திப்பினைத் தொடர்ந்து குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் சீரின்மையால் குளத்து நீர் குடியிருப்புக்குள் உட்புகுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

அத்தோடு கூழாமுறிப்பு குளத்தின் கீழான கீழ்வெளி வயல் நிலங்களுக்குச் செல்லும் விவசாய வீதிசீரின்மை மற்றும் கீழ்வெளி விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசன வாய்க்கால் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான விடயங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பார்வையிட்டிருந்தார்.
இவ்வாறாக மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், நிலமைகளை நேரிலும் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு எழுத்து மூலமாக கோரிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டதுடன், கூழாமுறிப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.


Recent Comments