Friday, January 23, 2026
Huisதாயகம்கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற தொகுதியில் விசேட கலந்துரையாடல்..!

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற தொகுதியில் விசேட கலந்துரையாடல்..!

கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (23.01.2026) பாராளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் K.D.லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களால் ஊடகங்களுக்கு விசேட செய்திக் குறிப்பொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (23.01.2026) பாராளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் K.D.லால்காந்த அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் துறைசார் அமைச்சின் பிரதி அமைச்சர்கள், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மகாவலி-எல் வலய விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான ஒருகூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் ஒருசில தினங்களுக்கு முன் பிறிதொரு நிகழ்வில் தெரிவித்த அமைச்சர் K.D.லால்காந்த அவர்கள் அதற்கான அழைப்பு அனுப்பப்படும் என தெரிவித்தார்.

ஆனால் இன்றைய கூட்டம் தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படாத நிலையில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டோம்.

அமைச்சர் லால்காந்த அவர்கள் இதன் போது எமது கருத்தை அறிய ஆவலாக உள்ளதாக தெரிவித்தார்.

மகாவலி-எல் வலய குடியேற்றம் தொடர்பான விடயங்களிலும் அங்கு இப்போது நடைபெறும் கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலும் கசப்பான கடந்தகால அனுபவங்களும் கரிசனையும் எமக்கு உள்ளது என்பதை அச்சபைக்கு தெரியப்படுத்தினோம்.

2011ம் ஆண்டு கிவுல் ஓயா திட்டம் தயாரித்ததிலிருந்து இன்று வரை வெளிப் படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுவதாக சபைக்கு சுட்டிக்காட்டினோம்.

இவ்வாறே செட்டிகுளத்தில் நடைபெறும் கீழ்மல்வத்து ஓயா நீர்ப்பாசன திட்டம் இரகசியமாக சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்கு தெரியாமல் அத்திட்டத்திற்கான காரியாலயத்தை இரகசியமாக அனுராதபுரத்தில் அமைத்து வேலைகளை முன்னெடுத்தமை தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்.

இறுதியாக நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிவுல் ஓயா திட்டம் தொடர்பான திட்டமுன்மொழிவை எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராய்ந்து பொருத்தமான அனுமதியை பெற வேண்டும் என்று நான் முன் மொழிந்திருந்தேன். அவ்வாறு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினேன்.

மகாவலி-எல் வலய அபிவிருத்தி என்ற பெயரில் அங்கிருந்த பூர்வீக குடிமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு 1983ல் குடியேற்றம் செய்யப்பட்டாலும் இதுவரை மகாவலி நீர் அங்கு கொண்டு வரப்படவில்லை, கிவுல் ஓயா திட்ட முன்மொழிவில் மகாவலி நீரை கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் இல்லாததாலேயே மாற்றீடாக இத்திட்டம் கொண்டு வரப்படுவதாக இருப்பதையும் மேற்படி திட்ட நோக்கத்தில் புதிதாக அபிவிருத்தி செய்யும் இடத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டதையும் தெளிவுபடுத்துமாறு கோரினோம்.

எமது கருத்தை கேட்டறிந்த அமைச்சர் உட்பட்ட குழுவினர் பின்வரும் உறுதி மொழிகளை எமக்கு வழங்கினர்.

1. திட்டப் பிரதேசத்துடன் தொடர்புடைய அனைத்து மக்கள் பிரதிநிகளுடனும் பிரதேச மக்களுடனும் மாசி மாத முற்பகுதியில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நடைபெறும்.

2. புதிய குடியேற்றவாசிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட மாட்டர்கள்.

சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாது திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்தும் தறுவாயில் எமது தலையீட்டையடுத்து தெளிவுபடுத்தல் செய்ய ஆயத்தமாகும் செயர்பாடு ஆபத்தானது, கண்டிக்கப்பட வேண்டியது.

மேற்படி திட்டத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டில் அனைவரும் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனைவரையும் இச் செயற்பாட்டில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!