மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என வவுனியாவில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சத்தியலிங்கம் அவர்கள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களுக்கு தெரிவித்திருந்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று (10.02.2026) வவுனியாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்கா மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் மற்றும் துறைசார் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். அவர் தெரிவித்திருந்தவையாவது,
வவுனியாவில் 6 இடங்களில் வீதி சமிச்சை விளக்குகள் பொருத்த அமைச்சரிடம் திட்ட முன்மொழிவொன்றை சமர்ப்பித்திருந்தேன். அதற்கான அனுமதி வழங்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் சில இடங்களில், குறிப்பாக வைத்தியசாலை சுற்றுவட்டம், மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம், பள்ளிவாசல் சந்தி ஆகிய இடங்களில் உடனடியாக அவற்றினை அமைப்பது சாத்தியமில்லை எனவும் வீதி அகலப்படுத்தல் செய்தபின்னரே அவற்றை செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வருட ஒதுக்கீட்டில் எ9 பாதையின் 176ம் மைல் டக்கம் 179ம் மைல் வரை வீதி அகலப்படுத்தல் மேற்கொள்ளப்படவிருப்பதால் குறித்த இரு இடங்களிலும் வீதி சமிச்சை விளக்குகளை பொருத்தக் கூடியதாக இருக்கும்.
தற்போது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிச்சை விளக்கு பொருத்தமற்றதாகவுள்ளதாக உள்ளதால் அந்த இடத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்.

பண்டாரவன்னியன் சதுக்க சந்தியிலும் குருமண்காடு சந்தியிலும் வீதிச்சமிச்சை விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
வவுனியா நகரில் காணப்படும் வடிகால்கள் குப்பைகள் நிறைந்து நீர் வழிந்தோட முடியாது காணப்படுகின்றது. யார் இதனை துப்பரவு செய்வது என்பதே இதற்கு காரணமாகும். இது நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினை. தயவுசெய்து இன்று இதற்கு ஒரு தீர்வு தாருங்கள் என கேட்டார்.
இதனையடுத்து நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின்னர், இதற்கு பதிலளித்த அமைச்சர் குறித்த வடிகால்களை துப்பரவு செய்யும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரியதெனவும், அவற்றை திருத்தம் செய்யும் பொறுப்பு குறித்த திணைக்களங்களுக்குரியதெனவும் தெரிவித்திருந்தார்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலர் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கின்றனர். தினமும் நடந்தே அவர்கள் பல்கலைக்கழகம் வருகின்றார்கள். ஆகவே அவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்காக பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் நடைபாதை அமைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் விபத்துக்களையும் குறைக்கமுடியும். இது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் குறித்த விடயம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சுடனும் பேசி நிதியொதுக்கீடு மேற்கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
வவுனியாவில் பல இடங்களில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன. அங்கே காணப்படும் சமிச்சை விளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. ஒழுங்காக வேலை செய்வதில்லை. பல இடங்களில் வீதியை மறிக்கும் கதவுகளும் இல்லை.
குறிப்பாக தாண்டிக்குளம் சந்தியில் காணப்படும் கடவையில் உள்ள சமிச்சை விளக்கு புகையிரதம் வராத பல நேரங்களில்கூட ஒலி,ஒளி எழுப்பும் பிரச்சினையும் காணப்படுகின்றது. ஆகவே நீண்டகாலமாக நிலவும் இதுபோன்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
விசேட தேவைக்குட்பட்டவர்கள் தமக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள அதற்கான மருத்துவ அறிக்கையினை பெறுவதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பில் நிலையான மற்றும் இலகுவாக திட்டமொன்று வகுக்கப்பட்டு அவர்கள் மருத்துவ அறிக்கை பெறுகின்ற விடயம் இலகுபடுத்தப்பட வேண்டும்.
49 சீ.சி மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் அவற்றை பதிவு செய்து உரிமமும் பெறமுடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் உரிமம்பெற ஆவன செய்யப்படல் வேண்டும் என கோரினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் அவ்வாறான மோட்டார் சைக்கிள்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் உதிரிப் பாகங்களாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டதாகவும் அம்மோட்டார் சைக்கிள்களுக்கு உரிமம் பெற முடியாதெனவும் தெரிவித்தார்.


Recent Comments