வவுனியாவில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த உறுதியளித்துள்ளார்.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் விசேட வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 12.03.2026 அன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார்,
வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை கமநல சேவைகள் நிலையம், கோவில்குளம் கமநல சேவைகள் நிலையம், பம்பைமடு கமநல சேவைகள் நிலையம் ஆகியவை அதிக சுமையுடன் இயங்கி வருகின்றன.
இந்த மூன்று கமநல சேவைகள் நிலையங்களிலிருந்தும் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றினைத்து புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையம் உருவாக்கப்பட வேண்டும் எனும் முன்மொழிவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
இதன்மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவைகள் நிலையங்களினூடாக சிறந்த, விரைவான சேவையினை வழங்க முடியும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் , இது ஒரு சிறந்த முன்மொழிவு. இந்த விடயத்தை கையாள்வதற்காக ஏற்கனவே ஒரு குழுவொன்று அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த முன்மொழிவை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து அனுமதியினை பெற்று அதனை குறித்த குழுவிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவாக உருவாக்கித்தர முடியும் என தெரிவித்தார்.


Recent Comments