போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 2029ம் ஆண்டிற்குள் வீதி விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தார்.
ஆண்டுதோறும் வீதி விபத்துகளினால் ஏற்படும் 2,700-க்கும் மேற்பட்ட மரணங்களை படிப்படியாகக் குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “சீரற்ற போதைப் பொருள் பரிசோதனையின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள்” (Principles and Practice of Random Drug Testing) என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில்,
“போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல பணிகளை முன்னெடுத்துள்ளது. நாம் எவ்வளவுதான் வீதிகளை மேம்படுத்தினாலும், நவீன வாகனங்களை இறக்குமதி செய்தாலும் அல்லது உள்கட்டமைப்பை மேம்படுத்தினாலும், முறையான பயிற்சியும் ஒழுக்கமும் இல்லாவிட்டால் சாலை பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.
ஆண்டுதோறும் இழக்கப்படும் 2,700-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களது இலக்கு 2029ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை பெருமளவு குறைப்பதாகும்,” என்றார்.
கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, 15%-18% வரையிலான சாரதிகள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், வீதி விபத்துகளில் சுமார் 53% ஓட்டுநர் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஒழுக்கம் மற்றும் பயிற்சி இன்றி போக்குவரத்து பாதுகாப்பை நிலைநாட்ட முடியாது. போக்குவரத்து செயல் திட்டத்தின் (Transport Action Plan) கீழ் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. வெறும் யோசனைகளுடன் நின்று விடாமல், நாங்கள் அவற்றைச் செயற்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டிற்கு ஏற்ற தரமான பேருந்துகள் மற்றும் வாகனங்களை நாங்கள் இறக்குமதி செய்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.


Recent Comments