பரீட்சை நிலையமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உரிய வலயக் கல்வி பணிமனை மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
கேகாலையில் பரீட்சை நிலையம் ஒன்றில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது, மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வினாத்தாள் வழங்கப்பட்டு, உரிய நேரத்துக்குள் மீள சேகரிக்கப்பட்டதாக மாணவர்களும் பெற்றோரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.
இவ்வாறான சம்பவங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அத்துடன், “தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை” தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments