யாழ் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான நாளை புதன்கிழமை (12) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழ்வதற்காக தோண்டப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியுள்ளனர்.
கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, வட மாகாண ஆளுநர், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும், இதுவரை காத்திரமான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் புதன் கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட குப்பைகளால் ஏற்படும் சூழல்சார், சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று, தமது முன்னோருக்கு பிதிர்க்கடன்களை நிறைவேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று கூடுவார்கள் என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாடச் செல்வார் என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவாசை தினத்துக்கு முன்னர், மீண்டும் அள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ளுவதற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


Recent Comments