இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வேய் ஹுவாசியாங் (H.E. Wei Huaxiang), சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும் பரஸ்பர நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதியளித்து, தனது பதவியைப் பொறுப்பேற்பதற்காக இலங்கை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தை வந்தடைந்ததும் தனது கருத்தை வெளியிட்ட அவர்,
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கால் இந்நியமனம் வழங்கப்பட்டமை தமக்குக் கிடைத்த “பெரும் கௌரவமும் பாக்கியமும் ஆகும்” எனக் குறிப்பிட்டதுடன், இலங்கையின் செழுமையான நாகரிகம், இயற்கை எழில் மற்றும் மக்கள் மீதுள்ள தமது மதிப்பையும் வெளிப்படுத்தினார்.
பண்டைய கடல்சார் வர்த்தகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப் பாதை வழியிலான இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட ‘இறப்பர்-அரிசி ஒப்பந்தம்’ (Rubber-Rice Pact) இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு ஒரு முக்கிய சான்றாகும் என்றும்,
இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, ‘பட்டுப் பாதை பொருளாதார மண்டலத் திட்டம்’ (Belt and Road Initiative), நீர்த் தொழில்நுட்பம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா-இலங்கை உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயங்களின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர், இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய மூலோபாய வழியைக் கொடுத்துள்ளதாகவும்,
“சீனா தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது” எனக் குறிப்பிட்ட அவர், தற்போது இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்திகளை ஒருங்கிணைக்கவும், பரஸ்பர வெற்றியை ஊக்குவிக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாய கூட்டுப் பங்காண்மையை ஆழப்படுத்தவும் இலங்கையுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக தூதுவர் வேய் தெரிவித்துள்ளார்.

சீனா-இலங்கை இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், வரலாற்றுச் சிறப்புமிக்க ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கையெழுத்தாகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும் எதிர்வரும் ஆண்டு குறிப்பதால், அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்றும்,
“இதன் பின்னாலுள்ள மகத்தான கடமையையும் பாரிய பொறுப்பையும் நான் முழுமையாக உணர்ந்துள்ளேன்” எனக் கூறிய தூதுவர் வேய், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இலங்கையிலுள்ள சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் தானும் தனது சக அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் உறுதியளித்தார்.
இரு நாடுகளையும் சேர்ந்த பங்குதாரர்களுடன் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் பேண விரும்புவதாகவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
“சீனா-இலங்கை உறவுகளின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாம் கைகோர்த்து அயராது உழைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.


Recent Comments