எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலும், தேங்காய் உற்பத்தியை அதிகரித்து நிலையான பயிர்ச் செய்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு தெங்குச் செய்கை நில மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதியளவு தேங்காய் விநியோகத்தை உறுதி செய்யவும், சிறு அளவிலான தெங்கு உற்பத்தியாளர்களின் நில உற்பத்தித் திறனை அதிகரிக்க ஊக்குவிக்கவும் இத்திட்டம் இலக்கு வைத்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் சுமார் 85,000 ஏக்கர் தெங்குச் செய்கை நிலங்களை உள்ளடக்கும் இத்திட்டம், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் அல்லது அதற்கு குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட சிறு அளவிலான தெங்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குச் செலவிடப்படும் தொகையில் 65% வரை கொடுப்பனவாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச ஊக்கத் தொகைக் விவரம்:
1. உரம் மற்றும் டோலமைட் (Dolomite) இட்டு மூடாக்கிடுதல் (Mulching): ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 700
2. டோலமைட் (Dolomite) மட்டும் இட்டு மூடாக்கிடுதல்: ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 200
3. தென்னந் தோட்டங்களுக்கான நீர்ப்பாசனம்: ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50,000
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


Recent Comments