Thursday, August 13, 2026
Huisதாயகம்நீதிபதிகளின் ஓய்வு விவகாரம்; எதிராக இணைந்த எதிர்க்கட்சி நீதிமன்றில் மனு..!

நீதிபதிகளின் ஓய்வு விவகாரம்; எதிராக இணைந்த எதிர்க்கட்சி நீதிமன்றில் மனு..!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் உடனான சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இணைந்த எதிர்க்கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,

இந்தத் திருத்தத்தின் மூலம் வழக்குத் தேக்க நிலைக்கோ அல்லது நீதி நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்களுக்கோ எவ்வித உண்மையான தீர்வும் கிடைக்காது என உயர்நீதிமன்றத்தில் வாதிடவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில் சுமார் ஒரு சதவீத வழக்குகள் மட்டுமே உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த வயது அதிகரிப்பு அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு தராது என்றும் தெரிவித்தார்.

இலங்கை நீதித்துறைக்கும் பிரித்தானியா மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நெருங்கிய உறவு நிலவி வருவதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் நம்பமுடியாத வகையில் உள்ளதாக உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்ததாகக் கூறினார்.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெறவுள்ள சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,

அனைத்தும் முடிவு செய்யப்பட்ட பின்னரே இச்சந்திப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தற்போதைய சூழலில் இந்தச் சந்திப்பினால் எவ்விதப் பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!