Thursday, August 13, 2026
Huisதாயகம்EPF - ETF நிதிகளை ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு தொழற் சங்கங்கள் கவலை..!.

EPF – ETF நிதிகளை ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு தொழற் சங்கங்கள் கவலை..!.

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை ஒன்றிணைப்பதுடன், அதனுடன் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து கலந்துரையாடுவதற்காக தனியார் ஊழியர் மையத்தின் (PWC) பிரதிநிதிகள் ஆகஸ்ட் 12 அன்று தொழிலும் தொழில் உறவுகள் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்தனர்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தொழிலாளர் போராட்ட மையத்தின் ஒழுங்கமைப்புச் செயலாளர் துமிந்த நாகமுவ,

EPF மற்றும் ETF நிதிகளை ஒன்றிணைத்து, முதலாளிமார், அரசாங்கம் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மும்முனை ஆளுகைக் கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்தார்.

தற்போது மத்திய வங்கியின் கீழ் EPF கணிசமான பாதுகாப்பைக் கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நாகமுவ, இந்த நிதியைத் திறைசேரிப் பிணைப்பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, பங்குச் சந்தையை நோக்கித் திருப்பிவிடும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

முதலாளிமாரின் பொருளாதார நன்மைக்காக நிதியின் ஆளுகையை மாற்றியமைக்க கடந்த காலங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நினைவூட்டிய அவர், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் கீழ் EPF ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முறையில் இயங்கி வருவதாகவும், அந்த நிதி பெருமளவில் திறைசேரிக்குக் கடன்களை வழங்குவதற்கே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

தற்போதைய முயற்சியானது, நிதியைத் திறைசேரிக் கடன்கள் மற்றும் பிணைப்பத்திர முதலீடுகளிலிருந்து விலக்கி, பங்குச் சந்தை முதலீடுகளை நோக்கி மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தச் சீர்திருத்தங்கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரநிலைகள் மற்றும் உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் முன்வைக்கும் வாதத்தை அவர் நிராகரித்தார்.

ILO வெளியிட்ட அத்தகைய வழிகாட்டல் அல்லது ஆவணம் எதுவும் உண்மையிலேயே இருந்தால், அதனை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுத்த நாகமுவ, தனியார் துறை முதலாளிகள் மற்றும் பெருவிலான தொழில்முனைவோரின் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக தொழிலாளர்களின் உரிமைகளைப் பலிகொடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

முந்தைய அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான முன்மொழிவுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய தரப்பினரே, தற்போது அதே கொள்கையைத் தாங்களே நடைமுறைப்படுத்த முயல்வது வருந்தத்தக்கது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!