முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் (LKIIRSS) இணைந்து ஆகஸ்ட் 12 அன்று தானம் வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
கொழும்பு ஸ்ரீ சம்போதி விஹாரையைச் சேர்ந்த மஹாநுவர அமித கவேசி தேரர் தலைமையில், மகா சங்கத்தின் ஏழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் சமய வழிபாடுகள் நடைபெற்றன.
அனுசாசன உரையாற்றிய வணக்கத்திற்குரிய அமித கவேசி தேரர், மறைந்த அமைச்சரின் அரசியல் ராஜதந்திரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டதுடன், இலங்கைக்கு அவர் ஆற்றிய சேவை வாழ்நாள் முழுமைக்கும் உரியது என்றும் வர்ணித்தார்.
அதனைத் தொடர்ந்து பிரீத் பாராயணம் நடைபெற்றதுடன், நாட்டின் நலனுக்காகச் செயற்படும் நிறுவனத்தின் எதிர்காலப் பணிகளுக்காக ஆசிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மறைந்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் LKIIRSS இன் ஆயுட்காலப் பணிப்பாளர் சபை உறுப்பினருமான சுகந்தி கதிர்காமர், LKIIRSS இன் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 2005ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பில், சட்டமா அதிபரினால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டம்மான், சார்ள்ஸ் மாஸ்டர், முத்தையா சகாதேவன் மற்றும் சிதோர் ஆரோக்கிய நாதன் ஆகிய ஐவருக்கும் எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
2009ஆம் ஆண்டு, யுத்தம் முடிவுக்கு, வந்ததன் பின்னர், முதல் மூன்று பிரதிவாதிகளின் பெயர்களும், குற்றச்சாட்டுப் பத்திரத்திலிருந்து அகற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recent Comments