பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் மின்னணு சேவைகள் பல வருடங்களாக செல்லுபடியாகும் சேவை ஒப்பந்தம் இன்றியே இயங்கி வந்துள்ளதாக கணக்காய்வாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, அதுகுறித்த அதிகாரப்பூர்வ விசாரணைக்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து, பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக களுவேவ (Nalaka Kaluwewa) நேற்று (12) தெரிவித்தார்.
திணைக்களம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மின்னணு சேவைகள் தொடர்பான சேவை ஒப்பந்தம் 2021 நவம்பர் 30 அன்றே முடிவடைந்துள்ளது.
இருப்பினும், 2025 ஏப்ரல் 21 வரை இணையதளத்தைப் புதுப்பிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் குறைபாடு சரி செய்யப்படாமல் இருந்ததாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
திணைக்களத்தின் இணையதளம் மற்றும் மின்னணு சேவைகளை தடையின்றி பராமரிப்பதற்கும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் தரவுகளின் ரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் உரிய அதிகாரிகளே பொறுப்பாவார்கள் என்று கணக்காய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இணையதளம் மற்றும் மின்னணு சேவைகளை மேம்படுத்தும்போது, திட்டமிடல் கட்டத்திலேயே பொருத்தமான பாதுகாப்பு வழிமுறைகளுடன் ரகசியத்தன்மை மற்றும் நம்பகத் தன்மை ஆகியவை கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே திருத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் தயாரிக்கப்பட்ட விபரக் குறிப்புகளுடன், புதிய அமைப்பிற்கான கொள்முதல் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தச் செயன்முறையை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான எஞ்சியப் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


Recent Comments