மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பலகைமுனை மீன்பிடி இறங்குதுறைக்கான 2கிலேமீற்றர் படகு ஓடு பாதையினை அமைத்துத் தருமாறு பாப்பாமோட்டை கடற்றொழிலாளர் சங்கத்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மீன்பிடி இறங்குதுறைக்கான ஓடுபாதை அமைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன் போது மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னார் – மாந்தை மேற்கு, பாப்பா மோட்டை கிராமமக்கள் மற்றும் பாப்பா மோட்டை கடற்றொழிலாளர் சங்கத்தினரின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அப்பகுதி மக்களின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டார்.
இதன்போது பாப்பாமோட்டை கிராமத்திலிருந்து 3கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பலகைமுனை மீன்பிடி இறங்குதுறைக்கு படகு ஓடுபாதை இன்மையால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக பாப்பாமோட்டை மீனவர் சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அந்த வகையில் பலகைமுனை இறங்குதுறையை பாப்பாமோட்டை, முள்ளிக்கண்டல், அடம்பன், தாமரைக்குளம், மாளிகைத்திடல், பாலைக்குழி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 165வரையிலான குடும்பங்கள் பயன்படுத்தி வருவதாக மீனவர்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அத்தோடு குறித்த பலகைமுனை மீன்பிடி இறங்குதுறையின் 2கிலோமீற்றர் தூரமான பகுதி ஆழம் குறைந்த களப்பு பகுதியாகக் காணப்படுவதால், களப்பு வற்றுகின்ற சந்தர்ப்பங்களில் தமது கடற்றொழில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் காணப்படுவதாகவும் மீனவர்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த மீன்பிடி இறங்குதுறைக்கு படகு ஓடுபாதை இன்மையால், படகினை 2கிலோ மீற்றர் தூரம்வரையில் தள்ளிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதுடன், பிடிக்கின்ற மீனையும் உரிய நேரத்தில் சந்தைப்படுத்த முடியாத நிலையும் ஏற்படுவதாகவும் மீனவர்கள் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கவலை தெரிவித்தனர்.

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலப் பகுதியிலிருந்து குறித்துபலகைமுனை இறங்குதுறைக்கான படகு ஓடுபாதையை அமைத்துத் தருமாறு தாம் தொடர்ச்சியாக உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்து வந்த போதும் இதுவரை படகு ஓடுபாதையை அமைக்க உரிய தரப்புக்கள் முன் வரவில்லை எனவும் மீனவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான சூழலில் மீனவர்கள் பலரும் தமது வாழ்வாதாரத் தொழிலைக் கைவிட்டு வேறு தொழில்களை நாடிச்செல்கின்ற அவல நிலையும் ஏற்பட்டுள்றதாகவும் மீனவர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
எனவே தமது பலகைமுனை மீன்பிடி இறங்கு துறைக்கான 02கிலோ மீற்றர் தூரமான படகு ஓடுபாதையை அமைத்துத் தருமாறு இதன் போது மீனவர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்தோடு பாப்பாமோட்டை கடற்றொழிலாளர் சங்கத்தினரால் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்ததுடன், நிலமைகளையும் நேரில் பார்வையிட்டு, மகஜரையும் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்விடயம் தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.





Recent Comments