பரீட்சையை மையமாகக் கொண்ட கற்றல் முறையிலிருந்து விலகி, திறன்கள், படைப்பாற்றல், அனுபவரீதியான கற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இலங்கையின் கல்வி மற்றும் மதிப்பீட்டு முறைகளை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இடம்பெற்ற, ஃபுல்பிரைட் நிபுணர் கலாநிதி பிரியான்வதா அபேவிக்ரம நிகழ்த்திய “250 Years of Educational Excellence: Lessons from a Sri Lankan American” என்ற பகிரங்க விரிவுரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வானது, 1952 ஆம் ஆண்டு முதல் கல்வி, கலாசார மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் ஊடாக அமெரிக்காவிற்கும் இலங்கையிற்கும் இடையிலான பரஸ்பர புரிதலையும் அமைதியையும் மேம்படுத்தி வரும் ஒரு தன்னாட்சி ஈர்-தேசிய ஆணையமான இலங்கை – அமெரிக்க ஃபுல்பிரைட் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பரீட்சைகள் மீதான அதிகப்படியான தங்கிவாழும் தன்மையைக் குறைத்து, செயற்பாட்டு வழிக் கற்றல் மற்றும் அனுபவரீதியான கற்றலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய அம்சம் மதிப்பீட்டு முறையைச் சீர்திருத்துவதாகும் என பிரதமர் கூறினார்.
கல்வி ரீதியாக வெற்றியடைந்த பல தலைமுறை இலங்கையர்களை உருவாக்கிய தற்போதைய கல்வி முறையின் பலங்களை இச்சீர்திருத்தங்கள் நிராகரிக்காது என்றும், மாறாக நிகழ்காலம் மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய இரு பாதைகளும் சமமான அங்கீகாரத்தையும் செல்லுபடியாகும் தன்மையையும் பெறுவதை உறுதிசெய்யும் அதே வேளையில், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களிடையே டிஜிட்டல் எழுத்தறிவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சீர்திருத்தச் செயல்பாட்டில் கலாநிதி அபேவிக்ரமவின் ஒரு மாத கால பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நிபுணத்துவமும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
ஃபுல்பிரைட் ஆணைக்குழு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில முதுகலை நிறுவனம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் இந்த முயற்சியை ஆதரித்த அனைத்து அதிகாரிகள் மற்றும் பங்காளிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கைக்கு அனைவரையும் உள்ளடக்கிய, நவீன மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையைக் கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.


Recent Comments