புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக உருவாக்கப்படவுள்ள கல்வி முறைமையை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரையிலான தெளிவான கல்விப் பாதைகள் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அகில இலங்கைத் தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற வளாகத்தில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாதியர் தொழிற்கல்வி டிப்ளோமாவுடன் முடிவடையாமல், பட்டப்படிப்பு வரை தொடரக்கூடிய கல்விப் பாதை உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான உயர்கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தாதியர் பட்டப்படிப்புக்கான கல்வி வழிகாட்டி வரைபடத்தைத் தயாரிப்பது மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் கல்வியியல் மற்றும் தொழிற்கல்வி ஆகிய இரு வழிகளிலும் மாணவர்கள் பட்டம் பெறுவதற்கும், தொழிலில் பிரவேசிப்பதற்குமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாதியர் பட்டப்படிப்பின் மூலம் தாதியர் சேவையின் தரத்தை மேம்படுத்துவதுடன், பராமரிப்புச் சேவை, முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட சுகாதாரத் துறையின் ஏனைய தொழில்களிலும் தொழிற்கல்வி வழியாக உயர்கல்வி வரை கற்கக்கூடிய கல்வி நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அகில இலங்கைத் தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவஆரச்சி, செயலாளர் எஸ்.பி. மெதிவத்த உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Recent Comments