கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் எழுந்த தாதியர்களின் சீருடை தொடர்பான விவகாரம் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்துச் சுகாதார அமைச்சர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டது.

அம்பாறை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்தைப் பேணுதல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் சீரான செயற்பாட்டை உறுதி செய்யும் நோக்கோடு இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று 19.08.2026 சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள், வைத்திய சாலையின் நிர்வாகக் கட்டமைப்பு சீராகச் செயற்பட்ட விதம் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், சில சமூக ஊடகங்களில் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான கருத்துக்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட அவர், மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வுகளை அமைதியான வழியில் கையாண்டு இவ் விவகாரத்திற்கு ஒரு சுமூகமான தீர்வை எட்டுமாறு அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

இக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ. சிறிநாத், ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Recent Comments