முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும் வரை ஆஜராகத் தேவையில்லை என முல்லைத்தீவு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை இந்தவழக்குடன் தொடர்புடைய ஆஜராகாத நபர்களை மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு 16ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்டமைக்காக தொல்லியல் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் வழக்கிலக்கம் பி1053/22 என்னும் குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் 16ஆம் திகதி வியாழக்கிழமை, விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்தவகையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந் நிலையில் வழக்கினை ஆராய்ந்த நீதவான், மன்றில் ஆஜராகிய மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும்வரை, நீதிமன்றில் ஆஜராகத் தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த வழக்குடன் தொடர்புடைய ஆஜராகத் தவறியோரை நிதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றால் பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவருக்கும் ஆதரவாக நீதிமன்றிற்கு வருகை தந்த அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments