Thursday, June 26, 2025
Huisதாயகம்யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்..!

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்..!

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தையும் யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்தினையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிறிகந்தனேசன் புயல்நேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் (18) யாழ் – மாம்பழம் சந்தியில் உள்ள அலுவலகம் ஒன்றில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் ஆண்டு தோறும் இடமாற்றம் நடைபெறுகின்றது. இவ்வாறு நடைபெற்றாலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களிலே பணி செய்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் ஐந்து வெளி மாவட்ட சேவையை நிறைவு செய்த ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர்.

இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள், வெளிமாவட்ட சேவையை 8 அல்லது 10 வருடங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் உள நெருக்கடிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

இடமாற்ற சபையிலே தீர்மானம் எடுக்கப்படுகின்ற போது தேசிய இடமாற்ற கொள்கையை அடிப்படையாக வைத்து அதற்கேற்ப இந்த இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களிலும் ஒரு அரசியல் சார்பான நடவடிக்கைகள் இடம்பெற்றன. இப்போது இருக்கின்ற அரசாங்கம் தங்களுக்கு சார்பானவர்களை பெரிய பெரிய பதவிகளில் அமர்த்துவதுடன், அரசியல் சார்பான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இடமாற்றத்திலேயே அரசியல் சார்பான தொழிற் சங்கங்கள் செயற்பட்டு கொண்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துகின்றார்கள். வடக்கு மாகாணத்தில் அண்ணளவாக 17 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்

இவற்றில் 80 சதவீதமானவர்கள் பெண் ஆசிரியர்கள். அவர்கள் மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வவுனியா வடக்கு – தெற்கு போன்ற அதி கஷ்ட பிரதேசங்களில் மிகவும் இன்னல்களை சந்திக்கின்றனர்.

இவர்கள் ஒரு தசாப்தத்திற்கு மேலாக வழி மாவட்டத்தில் வேலை செய்கின்ற போதும் வாழ்வியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இந்த விடயத்தில் இடமாற்ற பிரச்சனையும் செல்வாக்கு செலுத்துகின்றது. தற்போது இருக்கின்ற அரசாங்கம் அரசியல் ரீதியான நியமனத்தை வழங்குவதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வரலாற்றில் பேசப்படக் கூடிய ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தை பெற்றுக் கொடுத்தோம்.

இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து ஒரு சுகயீன விடுமுறை போராட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகத்தின் முன்னால் முன்னெடுப்பதோடு, யாழ்ப்பாண நகரில் ஒரு வீதி ஊர்வலத்தையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!