தகவல்களை வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் கிராம சேவகர்கள்..!

இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் நோக்கத்தில் கிராம சேவகர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோவிட் நோயின் நிலைமை மற்றும் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிப்பதை நிறுத்த கிராம சேவகர்கள் முடிவு செய்திருந்தனர்.



எனினும் இம்முறை கிராம சேவகர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராம சேவகர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் வீட்டில் இல்லை என்றால், உடனடியாக கிராம சேவகர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு மக்களுக்குத் தெரிவிக்கிறது.



அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக இம்முறை வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெயர் இடம்பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.



அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் வாக்காளர் பதிவுப் பணியை முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.