இன்றும் ஒரு மாணவனைக் கடத்த முயற்சி; கையை கடித்து தப்பிய சிறுவன் – தொடரும் பதற்றம்

கண்டி – கெலிஓயா, தெல்லங்கை பகுதியில் கடத்தல் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள மதரஸாவிற்கு வந்துச் சென்ற மாணவர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது வேனில் வந்தவர் முகமூடி அணிந்திருந்ததாகவும், குறித்த மாணவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.



எவ்வாறாயினும், குறித்த மாணவர் வேனில் இருந்தவரின் கையை கடித்துவிட்டு, சாதுர்யமாகத் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கெமராக்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், பிள்ளைகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெல்லங்கை பள்ளிவாசலின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய நாட்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும், கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பெற்றோர்களும், பிள்ளைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.