மன்னாரில் புதிதாய் முளைக்கும் மற்றுமொரு பௌத்த விகாரை – இராணுவத்தினர் தீவிரம்..!

மன்னார் – உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவில், புதிதாக பௌத்த விகாரையை அமைப்பதற்கான வேலை திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் – உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (22.05.2023) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவினால் அப்பகுதியில் புதிதாக ஒரு பௌத்த விகாரையை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக காரணங்களாக உள்ளது. மடு, முருங்கன், திருக்கேதீஸ்வரம், சௌத்பார், தலைமன்னார் போன்ற இடங்களில் 5 பௌத்த விகாரைகள் உள்ளது.



ஆனால் இங்கே பௌத்த குடும்பங்கள் 50 கூட இல்லை. பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் இராணுவம் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்த விடயத்தை உடனடியாக நான் புத்தசாசன அமைச்சருடைய கவனத்திற்கும், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்துகின்றேன்.



மக்களிடம் இருந்து எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றது. குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையிலே நேரடியாக குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.