யாழில் தாயின் நகைகளை களவெடுத்து கம்பஸ் காதலனுக்குக் கொடுத்த மாணவி..!

யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பல்கலைக் கழகத்தில் 2ம் வருடத்தில் கலைப் பிரிவில் கற்கும் மாணவன் ஒருவனை தனது வீட்டுக்கு அழைத்து தனிமையில் இருந்ததுடன் தனது தாயின் 5 பவுண் நகைகளை அவனுக்கு கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இரகசிய இடத்தில் வைக்கப்பட்ட தனது நகைகளில் ஒரு சில நகைகளைக் காணவில்லை என பொலிசாரிடம் குடும்பப் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.



குறித்த பெண்ணின் கணவர் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதுடன் அரச நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளருமாக இருந்துள்ளார். கணவர் மீதே சந்தேகப்படுவதாக குறித்த பெண் பொலிசாருக்கு கூறியுள்ளார்.

அத்துடன் அவரை விசாரித்து தனது நகைகளை கணவர் எடுத்திருந்தால் அது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளார். பொலிசார் கணவரை அழைத்து மேற்கொண்ட விசாரணைகளில் கணவர் நகைகளை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணின் 18 வயதான மகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட போதே மகள் முன்னுக்குப் பின்னாக முரண்பட்ட தகவல்களைக் கூறியதால் பொலிசார் மகளை இறுக்கமான முறையில் விசாரித்துள்ளார்கள்.



அதன் போதே 2 சங்கிலிகள் மற்றும் மோதிரம் ஆகியவற்றை தனது காதலனுக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

காதலன் யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவில் 2ம் வருடத்தில் கல்வி கற்பவர். அத்துடன் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சமூக வலைத்தளங்களிலும் கவிதைகள் மற்றும் காதல் பதிவுகள் போட்டு பிரபலமாக இருந்துள்ளார்.

அதன் போதே மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிய வருகின்றது. அவரை பொலிஸ் நிலையம் வரவழைப்பதற்காக பொலிசார் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அம் முயற்சி தோல்வியுற்றது.



இதனையடுத்து அவர் தங்கியிருந்த இடத்திற்கு இரவு சென்ற பொலிசார் அங்கிருந்து அவரை அழைத்து வந்து விசாரித்துள்ளனர். குறித்த நகைகளை மாணவியே தனது நகைகள் என தனக்கு தந்ததாகவும் பெற்றோரின் விருப்பத்துடனேயே மாணவி தருவதாக தனக்கு கூறியதாகவும் பல்கலைக்கழக மாணவன் கூறியுள்ளார்.

பொலிசார் மாணவனிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மாணவியின் தாய் தந்தை வீட்டில் இல்லாத நேரங்களில் மாணவியின் வீட்டுக்கு வந்து அவளுடன் தங்கியிருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தகவல்களை அறிந்து அதிர்ச்சியுற்ற முறைப்பாட்டாளரான பெண், பல்கலைக்கழக மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறியதுடன் முறைப்பாட்டையும் மீளப் பெற்றுள்ளார்.



அத்துடன் பொலிசாரின் முன்னாலேயே மாணவியை திருமணம் செய்யும் உத்தரவாதத்தையும் மாணவனிடம் பெற்றதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் பல பெற்றோர்களின் கண்காணிப்பு இன்மையால் தமிழர் பிரதேசங்களில் அரங்கேறி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.