விடுதலை புலிகளின் நோக்கத்திற்காக செயற்படும் கூட்டமைப்பு; சரத் வீரசேகர குற்றச்சாட்டு..!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கூறும் விடயங்களை கவனத்திற் கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(02.07.2023) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



தமிழ்தேசிய கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும், எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பினையே வெளியிடும். கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும்.



கூட்டமைப்பின் எம்.பி.க்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்தனர்.

எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.