பெளத்தம் சிங்களவர்களுக்கு சொந்தமானதல்ல; அதை தமிழர்களே வளர்த்தனர் – பியனந்த தேரர்

பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகுக்கும் சொந்தமானது என கொழும்பு, பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையின் பிரதம தேரர் பான்டே வல்பொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கிஉள்ளார்கள். அதையிட்டு நாம் பெருமை அடைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.



பான்டே வல்பொல பியனந்த தேரரின் 80 அகவை நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கணிசமான பண்டைய தமிழ் சங்க கால அங்கத்தவர்கள் இவ்வுலகில் பெளத்தத்துக்கு பெரும் பங்களிப்புகள் வழங்கி உள்ளார்கள்.



முதலாவது, புத்தகோஷ மகா தேரர் மற்றும் அனுருத்த மகா தேரர் ஆகியோர் அபிதர்ம காவியத்தை எழுதினார்கள். அமெரிக்காவிலும், ஆனந்த குமாரசுவாமியே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெளத்த கல்வியை, 1930 களில் போதிக்க ஆரம்பித்தார்.

ஆகவே, பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகத்துக்கும் சொந்தமானது. பண்டைய காலங்களில் தமிழ்ச் சங்ககால அங்கத்தவர்களே பெளத்தத்தை வளர்த்து எடுத்தார்கள். இதை நாம் பெருமையுடன் கூறி வைக்க வேண்டும்.” என்றார்.



இந்நிகழ்வில் விசேட அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் உதய கம்மன்பிலவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்து கொண்டார்கள்.