கேரள குண்டு வெடிப்பு தொடர்பில் வௌியாகிய புதிய தகவல்..!

கேரள குண்டு வெடிப்பு தொடர்பில் நபரொருவர் சரணடைந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ள நிலையில், கேரள குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் கேரள டிஜிபி கூறியுள்ளார்.

இந்த நிலையில், திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், தானாக ஒருவர் சரணடைந்துள்ளார்.



வெடிகுண்டு வைத்தது நான்தான் எனக்கூறி அவர் தற்போது சரணடைந்துள்ளார். அந்த நபரை பொலிஸார் முழுவதுமாக நம்பவில்லை என்றாலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரின் பின்னணி என்ன என்பது குறித்தும், குண்டுவெடிப்புக்கும், இவருக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.



இதற்கிடையில், சந்தேகத்தின் பேரில் கண்ணூரில் வசிக்கும் குஜராத்தை சேர்ந்த ஒருவரை காவலில் எடுத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இருவரின் முழு விபரத்தையும் பொலிஸார் வெளியிடாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.