நாட்டின் வருவாயை சேகரிக்கத் தவறிய அரச திணைக்களங்கள் – கடும் நிலைப்பாட்டில் ரணில்

நாட்டிற்கு தேவையான வருவாயை சேகரிக்கத் தவறியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் மற்றும் சுங்க திணைக்களங்களின் பிரதானிகளிடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தமது கடும் நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வரிக் கோப்புகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும், என்றபோதும் 500,000 வரிக் கோப்புகளின் அடிப்படையில் மாத்திரம் ஏன் வரி அறிவிடல் தொடர்கின்றது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



அரச நிறுவனங்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கான தனது முயற்சியில், நாட்டின் வரித் தளத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் இன்னும் ஏன் செய்யப்படவில்லை என்று அவர் வினவியுள்ளார்.

மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் 500,000 வரிக் கோப்புகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன, எனினும் கோப்புகள் மில்லியன் கணக்கில் இருக்க வேண்டும்.



இந்த அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் தோல்வியினால் தான் அரசாங்கம் தனது வருமான இலக்குகளை அடையத் தவறி வருகிறது என அதிபர் இதன்போது கூறியுள்ளார்.



இதேவேளை பொது மக்களுக்கான மறைமுக வரிகளைக் குறைப்பதே தனது நோக்கமாக இருந்தாலும், அரச நிறுவனங்கள் தமது கடமைகளைச் செய்யத் தவறியதால் தற்போது அவ்வாறு செய்ய முடியாதுள்ளது என விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.