சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிய அம்சம் அறிமுகம்..!

இலத்திரனியல் அல்லது ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரங்களில் சிம் அட்டைகளுக்கு பதிலாக கியூஆர் குறியீட்டைக் கொண்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த திட்டம் தொடர்பில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த அக்டோபர் 16ஆம் திகதி இலங்கை இராணுவம் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சடித்து வழங்குவதை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைத்ததன் பின்னர், இந்த இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரத்தின் அச்சிடும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், கடந்த அக்டோபர் 11ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.



பொருளாதார வீழ்ச்சியால், சிம் அட்டைகளுக்கான “சிப் ரீடிங் யூனிட்களை” இறக்குமதி செய்வது கடினமாக காணப்படுகிறது.

இதன்காரணமாக அட்டைகளை வைத்திருப்பவரின் தகவல்களை எளிதாகப் படிக்க, கியூஆர் குறியீட்டை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸாருக்கு மாத்திரம் கியூஆர் குறியீடுகள் பற்றிய தகவல்களை படிக்க தனி தொலைபேசி மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான குற்றத்திற்கான புள்ளிகள் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.