கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் வெளிவரும் எச்சங்கள்; இன்றும் ஏழு மனித எச்சங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இன்று மேலும் ஐந்து மனித எச்சங்கள் மற்றும் துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.



இந் நிலையில், இன்றைய அகழ்வு பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை இடம் பெற்றிருந்தது.

இதன்போது 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டன. அத்துடன், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.



குறித்த அகழ்வுப் பணியானது, இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று இரண்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.