லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் Tower of Londonல் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மத்திய லண்டனில் அமைந்துள்ள Tower of London என்ற 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி சாத்திய கல்லறையின் மேல் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டது.

லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது.



இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல இடமும், பிரித்தானிய ராஜ குடும்பத்தின் கிரீடம் மற்றும் அணிகலன்களின் (crown jewels) காப்பிடமும் ஆகும்.



உலகப் பிரசித்தி பெற்ற Tower Bridgeல் செல்லும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய மக்களும், உல்லாசப் பயணிகளும் பல மணிநேரம் நடந்த இம்மாவீரர் வணக்கத்தைப் பார்வையிட்டனர்.



தாயகத்தில் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டு, இன்றும் அவற்றின் எச்சங்கள் கூட சிறிலங்கா அரசால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் லண்டன் மாநகரின் மத்தியில் உலகறிந்த Tower Bridge ன் நிழலில் இவ்வணக்கம் எத்தங்குதடையும் இன்றி உணர்வுபூர்வமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.