ஹமாஸ் போராட்டத் தலைவர்களுக்கு விலையை அறிவித்த இஸ்ரேல் இராணுவம்..!

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை காட்டிக்கொடுத்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் ஹமாஸ் தலைவர்கள் தற்போது காசாவின் கட்டுப்பாட்டை இழந்து வருவதாகவும் ஒரு முட்டையை கூட வறுக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் மக்கள் குடியிருப்பு பகுதிமீது கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் விமானப்படை துண்டுப் பிரசுரங்களை வீசி அதில் மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளது.



அதில் காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வாருக்கு 400,000 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இயக்க நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதாக நம்பப்படும் சின்வாரின் இளைய சகோதரர் முஹம்மதுவிற்கு 300,000 டொலர்களும், கான் யூனிஸ் படையணியின் தளபதி ரஃபா சலாமாவிற்கு 200,000 டொலர்களும் ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி முகமது டெய்ஃப்.ற்கு 100,000 டொலர்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



“ஹமாஸ் தனது பலத்தை இழந்து விட்டது”, அதன் தலைவர்கள் “ஒரு முட்டையை வறுக்க கூட முடியவில்லை” என்று துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹமாஸின் உயர் அதிகாரியும், அமைப்பின் அரசியல் பணியக உறுப்பினருமான இஸ்ஸாத் அல்-ரிஷேக், காஸா மீதான கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்து வருகிறது என்ற இஸ்ரேலிய குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளித்தார்.



“முட்டை பொரிக்க நேரமில்லை என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டிற்கு எங்கள் எதிர்ப்பு உறுப்பினர்கள் மெர்காவாவை வறுப்பதில் மும்முரமாக உள்ளனர்,” என்று அல்-ரிஷேக் பதிலளித்தார்.