சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பெரிய மீன்களை இலகுவாக பிடிக்க முடியும் – தேசபந்து தென்னக்கோன்

சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பாரிய மீன்களை இலகுவாக எம்மால் கண்டுபிடிக்க முடியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குற்றங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளது, தற்போதைய சுற்றிவளைப்புகளை விஸ்தரிக்கும் பட்சத்தில் 6 மாதங்களில் குற்றங்களை 50 வீதமாக குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

“பாரியளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், நெத்தலிகளே கைது செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அந்த கருத்தில் ஒரு உண்மையும் இருக்கிறது. நெத்தலிகள் போதைப்பொருளுடன் வீதிக்கு இறங்கும்போதே அவர்களை கைது செய்ய காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

அவர்களை அவ்வாறே விட்டுச் செல்ல முடியாதல்லவா? போதைப்பொருள் பாவனையாளர்களும் போதைப்பொருள் வர்த்தகர்களும் இருவேறு தரப்பினர் அல்ல.



கடந்த 17ஆம் திகதியின் பின்னரும் அதற்கு முன்னரும் உள்ள நிலைமையும் நான் அவதானித்தேன். நாம் கண்டறிந்துள்ள 1,091 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் முழு நாட்டிலும் இருக்கின்றனர்.

இவர்கள் காலையில் குற்றங்களை செய்துவிட்டு இரவில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்கிறார்கள்.

காலையில் கொலை செய்துவிட்டு இரவில் வெளிநாட்டுக்கு செல்லும் முறைமை ஜனவரியிலிருந்து மாற்றமடையும்.



ஜனவரி மாதம் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். மேலும், 31 பாதாள குழு உறுப்பினர்கள் சிறைச்சாலையில் இருந்து குற்றங்களை வழிநடத்துகின்றனர்.

இவர்களையும் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாதாரண மக்களுக்கு எதிராகவோ அல்லது காவல்துறையினருக்க எதிராகவோ பாதாளக் குழு உறுப்பினர்கள் ஆயுதங்களை ஏந்தி செயல்படும் போது அவர்களுக்கு காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் தகுந்த பாடம் புகட்டப்படும்.” என்றார்.